Saturday 1 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 4

எப்போதும் நட்ட நடுநிசியில் ராக்கோழி மாதிரி முழிச்சு உக்காந்து பதிவு எழுதி தான் பழக்கம். ஒரு மாற்றத்துக்காக இன்னைக்கு காலங்கார்த்தால.

சுசீந்திரம் தரிசனம் முடிந்து "முட்டம்" (அடி ஆத்தாடீ...என்று முட்டம் சின்னப்பதாசும், ஜெனிஃபர் டீச்சரும் டூயட் பாடுவாங்களே மறக்க முடியுமா?)போவதாக தான் பிளான்.முட்டம், சங்குத்துறை, சொத்தவளை இதெல்லாம் வங்காள விரிகுடா, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொடுத்திருக்கும், குட்டி குட்டி கடற்கரைகள். இதில் எங்கள் திருமணம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே, DVD outdoor ஷூட்டிங் க்காக, (இப்டின்னா என்னன்னு புரியாதவர்கள் பின்னூட்டத்திலோ, சாட்டிலோ, கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.இப்போதைக்கு சிரிப்பை கட்டுப்படுத்தி கொள்கிறேன்) சொத்தவளை போய் இருந்தோம். அதனால் "இந்த முறை முட்டம் போவோம், படத்தை பதினைந்து தரம் பாத்துட்டே, அந்த பீச்சை நேரா கொண்டு போய் காட்டுறேன்" ன்னு சொல்லிருந்தார். ஆனால் நான் சுசீந்திரத்தில் உருகி மருகி, கேள்வியெல்லாம் கேட்டு முடிந்து வந்து சேருவதற்குள், நேரமாகி விடவே, ஒரு சின்ன முறைப்புடன் பக்கத்தில் இருக்கும் சங்குத்துறைக்கே போவதாக முடிவாகி விட்டது.

"கடல், நிலா, ரயில் மூன்றும் எவ்வளவு முறை பார்த்தாலும் மனிதனுக்கு அலுக்கவே அலுக்காது" என்று படித்து இருக்கிறேன். எனக்கு இந்த லிஸ்டில் யானையை சேர்க்கணும் என்றால், கதிரை பொறுத்த வரை இந்த லிஸ்டை 'கடல், கடல், கடல்' என்று மாற்றி விடலாம். ஆனால், நான் இந்த முறை, "நான் கால் கூட நனைக்க மாட்டேன், எனக்கு இப்டி கடற்கரையில் உக்காந்து அலையை வேடிக்கை பார்க்க தான் பிடிக்கும்" என்று நல்ல பிள்ளையாக (பின்ன, மாமனார், மாமியார் எல்லாம் கூட வந்து இருந்தார்களே!) உக்காந்துட்டேன். ஆனால் உண்மையில், கடலில் நனைந்து விளையாடுவதை விட, உக்காந்து வேடிக்கை பார்ப்பது தான் அதி சுகம். அங்க நாங்கள் போட்டோ எடுப்பதை பார்த்து, "நம்ம ஊரு கடலை photoல்லாம் எடுக்கறாங்கப்பா" என்று நக்கல் அடித்தது ஒரு மீனவ இளைஞர் கூட்டம். நான் பாரிஸ் போய் இருந்தப்போ, "Eiffel டவர் போறேன் என்று கிளம்பிய போது, பிரெஞ்சு colleague ஒருத்தர், பதினேழு வருஷமா இதே ஊரில் இருக்கேன், ஆனா அந்த டவர் மேல ஏறினது இல்ல, அங்க அப்டி என்னதான் இருக்குன்னு நீ அங்கே போற?" என்று கேட்டதும், இப்போது எங்க வீட்டுக்கு வரும் உறவினர்கள் "லால்-பாக் போகணும்" என்று சொல்லும்போது, நானும் கதிரும் பரிமாறிக்கொள்ளும் நமுட்டு சிரிப்பும் ஞாபகம் வந்தது. கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் வரை யாருடைய/எதனுடைய அருமையும் நமக்கு தெரிவதில்லை.

25-June. Wednesday.
அதிகாலையில் சென்ற இடம் தேரூர். சில உறவினர்களை drop பண்ண போன போது, "நீயும் வாயேன்" என்று அழைத்தார். நாகர்கோயில் பகுதி மக்களிடம் நான் கவனித்த ஒரு விஷயம் யாரு வீட்டுக்கு போனாலும், அவங்க வீட்டில் இருக்கும் போட்டோ ஆல்பம் எடுத்து காண்பிப்பார்கள். காபி,snacks கொடுப்பதை போல, இதும் விருந்தோம்பலில் ஒரு விஷயம் போலும். நோட் பண்ணிக்கிட்டேன், நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்தால் நானும் பண்ணனும் இல்ல?

அன்றைய பிளான் திற்பரப்பு அருவி. குற்றாலம் போவதாக இருந்தது, சீசன் காலை வாரிவிடவே, திற்பரப்பாக மாறி விட்டது. நாகர்கோயில் - திருவனந்தபுரம் சாலையில், இந்த அருவிக்கு போவதற்கு diversion கிடைக்கிறது. நான், கதிர், அர்ஜுன், எனது நாத்தனார், அவருடைய கணவர், குழந்தைகள். போகும் வழியிலேயே பத்மநாபபுரம் அரண்மனை. 'பொங்கலை பொங்கலை வெக்க மஞ்சளை மஞ்சளை எடு...' 'வருஷம்-16' படத்துல வர்ற வீடு, இந்த அரண்மனை தான்.அங்க இருக்கும் guides எல்லாம்,அரண்மனையை சுற்றி காட்டும் போது, "இது தான் குஷ்பூ மேடம் குளித்த இடம், தலை வாரிய இடம்" ன்னு சொல்லுவாங்களாம். குஷ்பூ மேடம் க்கு திருமணம் ஆகி குழந்தைளும் பெரிசாகி விட்டதாலும், அருவி மீது இருந்த ஆர்வமும், எங்கள் எல்லாரையும் "அரண்மனையை வரும் போது பார்த்து கொள்ளலாம்" என்று சொல்ல வைத்தது. பாவம் நாங்கள் யாரும் அறிந்திருக்க வில்லை, 'வரும் போது நாங்க பதறி அடித்து டாக்டர் தேடி ஓட போகிறோம், இந்த அரண்மனைய பாக்க முடிய போவதில்லை' என்று.

திற்பரப்பு - ஒரு சிறிய அருவி தான். ஆனால் அதிக கூட்டம் இல்லை. தண்ணீரும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நாத்தனார் பிள்ளைகள் இருவரையும், அர்ஜுனையும் அவரவர் அப்பாக்கள் நேரடியா கொண்டு போய் அருவியில் நனைக்கவும், குழந்தைகள் பயந்து கத்த ஆரம்பித்து விட்டன. அப்பாக்கள் வேஸ்ட். புள்ளைங்க psychology தெரியலை. மூணு பேரையும் கூட்டி போய், கொஞ்சமா தண்ணீர் வர்ற இடத்துல விளையாட விட்டேன் சற்று நேரம் தான். படு குஷியாக விளையாட ஆரம்பித்தார்கள்.அதிலும் அர்ஜுன் செம ஆட்டம்.

பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு. ஒரு தனி அருவி. :-)
நானும் நாத்தனாரும் குழந்தைகளும் மட்டும் தான் அப்போது அங்க. அருவியில் தலை நனைக்கும் போது, யாரோ பட் பட்டென்று முதுகில் சாத்துவதை போல இருக்கும். அவ்ளோ வேகம். 'உண்மையில் யாரவது இப்டி அடித்தால் விட்டுடுவோமா?' என்று பேசிக்கொண்டே நனைந்து கொண்டு இருந்தோம்.

அழகாக போய் கொண்டிருந்த பயணம், திருஷ்டி பட்டதை போலாகி விட்டது.
நாத்தனாரும், அவருடைய இரண்டாவது பெண்ணும் பாசியில் வழுக்கி விழுந்து காயமாகி விட்டது. அதிலும் குழந்தைக்கு நெற்றி பொட்டில் ரத்தம் நிற்கவே இல்லை. காரில் இருந்த முதலுதவி சமாச்சாரங்களை வைத்து அப்போதைக்கு சமாளித்து விட்டு, திரும்பி நாகர்கோயில் விரைந்தோம் டாக்டரை தேடி.

-இன்னும் பயணம்.(மூர்த்தி கல்யாண வைபோகமே)

எச்சரிக்கை: 'உங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் விழறதுன்னா ரொம்ப பிடிக்குமா?' ரீதியில் பின்னூட்டங்கள் வரவேற்க படவில்லை'. :-)

With that I wish each of you, a ver happy Friendship Day! நண்பன் ஒருவன் வந்த பிறகு, விண்ணை தொடலாம் உந்தன் சிறகு, வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே....

No comments:

Post a Comment