Saturday, 7 November 2009

Alice(s) in wonderland

இன்று காலை கடவுள்களின் பள்ளத்தாக்கு (திரு.தேசிகன் தொகுத்து முன்னுரை எழுதியது) சுஜாதா கட்டுரை தொகுப்பை எடுத்து, கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கம் திறந்தேன். "பெண்களும் நானும்".

பெண் எழுத்தாளர்களுக்கு அறிவுரை, தன்னுடைய அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த பெண்கள், தன் பாட்டி (இந்த பாட்டி கட்டுரை ஏற்கனவே வேறு எங்கோ படித்த ஞாபகம்) என்று கட்டுரையில் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை.

பெண்களிடம் வேலை வாங்க மூன்று விதி முறைகள் இருக்கிறதாம். அவருடைய அனுபவத்தில் சொல்கிறார்.

-பெண் என்பதால் இந்த வேலை வராது என்று முடிவு பண்ண கூடாது.
-பெண்களிடம் உள்ள இயற்கை கோளாறுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
-பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது.

முதல் பாயிண்ட் படித்த போது ஒரு சபாஷ் போட்டது மனது.

இரண்டாவதை படித்த போது,(அவர் எந்த இயற்கை கோளாறை :-) சொன்னாரோ)எனக்கு இந்த பதிவை எழுத தோன்றியது.

வேலைக்கு போகும் பெண்களுக்கு என்னுடைய சொந்த/'உடன் பணிபுரிவோரை கவனித்த' அனுபவத்தில் சொல்ல விரும்பும் சில விஷயங்கள்:

- நம் மேலாளரிடமோ,உடன் பணிபுரிவோரிடமோ 'நாம் பெண்' என்ற காரணத்தை வைத்து எந்த சலுகைகளையும் எதிர்பார்க்காதீர்கள். இது நமது குடும்பம் அல்ல. இங்கு நாம் செய்யும் வேலைக்கு மட்டும் தான் சம்பளமே தவிர, நமது உடல்,மன பிரச்சனைகளுக்கு சேர்த்து அல்ல.அப்படி எதிர் பார்த்தோமே ஆனால்,அது நம்மை நாமே தாழ்த்தி கொள்ளுவதற்கு சமம்.

- குழந்தை பெறுவது, மாதா மாத சமாச்சாரங்கள் எல்லாம் நமது anatomy. கடவுள் design பண்ணது. இதெல்லாம் மொத்தமாக சேர்த்து தான் நாம். "இதனால் எல்லாம் என் வேலை பார்க்கும் திறன் குறைகிறது, career growth தடை படுகிறது, ஒரு ஆணுக்கு இந்த பிரச்சனைகள் இல்லை" என்று புலம்பாதீர்கள். மொத்தத்தில் "எனக்கு அங்க வலிக்குது இங்க வலிக்குது" விஷயங்களை எல்லாம் அலுவலகத்துக்கு கிளம்பும் போது செருப்பை மாட்டுவோமே,அப்போதே கழற்றி வைத்து விடுங்கள்.

- அலுவலக மீட்டிங் போது, ஆறரை அடி உயரத்தில் கடுகடு முகத்தோடும்/குரலோடும் ஒருத்தன், வேணும்னே வேணும்னே நம்மள outsmart பண்ணவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கேள்வி கேக்கும் போது கொஞ்சம் உதற தான் செய்யும். பயப்படாதீர்கள். அதற்கு முதல் தேவையாக technical skillsஐ வளர்த்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அறிவாளியாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். எந்த கொம்பனையும் சமாளித்து விடலாம்.சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் மேலாளருக்கு கீழே வேலை பார்த்தேன். அவங்க சொல்வாங்க,
"If one has to run 100 meters to prove that one can run, a woman has to run 200 meters to prove that she can run".

- "நான் ஒரு பெண்" என்ற consciousnessஐ துடைத்து எறிந்து விடுங்கள்.இந்த நினைப்பு நம்மை பலவீனமாக ஆக்கி விடும்."வெகு உயரத்திற்கு சரசர வென்று போய் விட்ட பெண்களை, வேறு எந்த விதத்திலும் விமர்சிக்க வழி இல்லாத நிலையில்,அவர்களது பர்சனல் விஷயங்கள் படு மலிவாக விமர்சிக்க படலாம்.துளியும் கண்டு கொள்ளாதீர்கள்."ஐயோ நான் ஒரு பொண்ணாச்சே...இப்டில்லாம் பேசறாங்களே" என்று எந்த நிமிடத்தில் concsious ஆகிறீர்களோ, அப்போதே தோற்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.

-கட்டுரையில் கவர்ந்த இன்னொரு வரி, பெண்களுக்கு 'சுலபக்கோபமும்' ,அழுகையும் வரும். அலுவலகத்தை பொறுத்த வரை சில நேரங்களில் 'சுலபக்கோபம்'நம்மள காப்பாத்தும். ஆனா தப்பு நம்ம மேல இருந்தா, தைர்யமா ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுடுங்க. தேவை இல்லாத இடத்தில் செய்யப்படும் விவாதம், கேலிக்குரியதாகி விடும். ஆனா எந்த காரணத்துக்கும் அலுவலகத்தில் அழாதீர்கள். (எங்கயுமே அழாம இருப்பது ரொம்ப நல்லது. ஆனா அது நமக்கு சற்று கஷ்டம் தான்)

-பேறு கால விடுப்பிற்கு பிறகு வேலைக்கு சேர்ந்த முதல் சில மாதங்களுக்கு நம் மனதில் புயல், மழை, சூறாவளி எல்லாம் சேர்ந்து சுற்றி சுழற்றி அடிக்கும். 'வேலைக்கு கண்டிப்பா போகணுமா?' 'குழந்தை சாப்பிட்டுச்சோ இல்லையோ','அம்மாவை தேடுதோ', இந்த மாதிரி மன உளைச்சல் மட்டும் இன்றி, நிறைய உடல் உபாதைகளும் கூட சேர்ந்து பாடாய் படுத்தும். இந்த நேரத்தில் நாம் கடை பிடிக்க வேண்டியது பொறுமை பொறுமை மற்றும் பொறுமை. 'வேலைய விட்டு விட வேண்டும்'என்ற முடிவை இந்த நேரத்தில் தப்பி தவறி கூட எடுத்து விட வேண்டாம். நம் உடல்நிலை, வாழ்க்கை முறை எல்லாமாய் மாறி விட்டதால் ஏற்படும் அயர்ச்சி தான் இது. சில மாதங்களை பொறுமையாக கழித்து விட்டோம் என்றால், அப்புறம் ஒரு தெளிவும் நிதானமும் வந்து விடும். அதுக்கு பிறகும் வேலைய விட தோன்றினால் அது சரியான மனநிலையில் எடுக்கும் முடிவு.

-குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு , வேலையில் கவனம் செலுத்துவது சவாலான விஷயம். நீங்கள் எவ்வளவு "ambitious " என்பதை பொறுத்து உங்கள் சாய்ஸ் தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்த சாய்ஸில் தெளிவாக இருங்கள். சில பெண்களுக்கு குடும்பம் வேலை என்று இரண்டையும் சமாளிக்கும் சாமர்த்தியம்/அதிர்ஷ்டம் இருக்கலாம். முடிந்தவரை அந்த சாமர்த்தியத்தை கற்றுக்கொள்ள முயலுங்கள்.முடியாது போனால்,அதற்காக குமையாதீர்கள். ஆனால், நாம் அலுவலகத்தில் எவ்வளவு effort போடுகிறோமோ அதை பொறுத்து தான் உங்கள் உயர்வு நிர்ணயிக்க படும் என்பதில் தெளிவாக இருங்கள். இங்கு எல்லாமே Tit for Tat தான். "I am ambitious"," I am capable" முதலான qualitative விஷயங்கள் மட்டும் வேலைக்கு ஆகாது. செயலில் காண்பிக்க வேண்டும். நமது பர்சனல் காரணங்களினால், ரிசல்ட் காண்பிக்க முடியாது போனால், அதற்கான பலனை எதிர்கொள்ளும் பக்குவமும் வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிட்டு மூக்கை சிந்த கூடாது.Try to take things easy. Job is just something that brings food to our plate.

-மூன்றாவது பாயிண்ட் (பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது) படித்த போது, சற்று sarcastic புன்னகை வந்தது. லாஜிக் நல்லாவே வர்ற பெண்களும் இருக்கிறார்கள். உணர்வு பூர்வமாக மட்டுமே பார்க்க தெரிந்த ஆண்களும் இருக்கிறார்கள். பெண்களை கிண்டல் பண்ணி கொண்டே டிவி சீரியல் பார்க்கும் ஆண்களை போலவே.

To all the working women, We all are Alice(s)!There will ofcourse be 'rabit holes', 'drinks that would shrink you', cakes that would grow you', 'riddles with no answers', 'caterpillars', 'dodos', 'King', 'Queen' and many more. Lets Rock it. After all, we are in WONDERLAND you see :-)

Tuesday, 3 November 2009

ஜூலி போட்டது ரெண்டு குட்டி

முன்குறிப்பு: இது ஒரு சிறுகதை முயற்சி அல்ல. இலக்கியவாதிகள் அச்சம் தவிர்த்து தொடர்க.

கரண்ட் இல்லாத ஒரு மழை நேர மாலையில் தான் ஜூலி எங்கள் வீட்டுக்கு வந்தது. அப்போ அது நிறை மாத கர்ப்பிணி. வீட்டு சுவரோரம் மழைக்கு ஒதுங்கி குளிரில் நடுங்கி முனகி கொண்டு இருந்ததை பார்த்து அப்பா, அம்மா, நான், தம்பி என்று குடும்பமாக இரக்கபட்டோம். அடுத்த பத்து நிமிடத்தில் திண்ணையில் ஒரு சாக்கு படுக்கையும், ஒரு பழைய தட்டில் பால் சோறுமாக, ஜூலி எங்களோடு சேர்ந்து கொண்டது. அழுக்கான வெள்ளை நிறத்தில் இருந்த அதற்கு நானும் தம்பியும் சேர்ந்து ஜூலின்னு பெயர் வைத்தோம்.

ஜூலிக்கு எங்க எல்லாரையும் ரொம்ப பிடித்து விட்டது. நானும் தம்பியும் மாலை நேர நொறுக்கு தீனியை மூன்று பங்கு ஆக்க ஆரம்பித்தோம். "குட்டி போட போகுதுல்ல, பாவம் ரொம்ப பசிக்கும்" என்று அம்மா அடிக்கடி அதற்கு ஏதாவது கொடுத்து கொண்டே இருப்பாங்க. ஜூலி இது எல்லாத்தையும் விட எங்க அப்பாவோட TVS -50 சத்தத்துக்கு தான் அதிகமா வால் ஆட்டும்.

அப்பா பத்தாங்கிளாஸ் ஆங்கில டியூஷன் எடுப்பாங்க. அதுல 'ஹரன்'ன்னு ஒருத்தன் படிச்சான். இந்த கதைல இவன் எங்க வந்தான்? விஷயம் இருக்கு. கதைக்கு ஒரு திருப்பு முனை கொடுக்க போறதே இவன் தான். இவன் அப்டி என்ன பண்ணான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்லிடறேன்.

எங்க வீட்டுல அப்போ ஏதோ பூச்சு வேலை நடக்குதுன்னு நிறைய ஆத்து மணல் கொட்டி வெச்சுருந்தாங்க. அந்த மணல்ல தான் நானும் தம்பியும் அப்பாக்கு ரெண்டு பக்கமும் படுத்துக்கிட்டு நிலாவை பாத்துக்கிட்டே கதை கேப்போம். ஜூலியும் எங்க பக்கத்துல உக்காந்துக்கும்.

ஜூலி வந்து ஒரு நாலஞ்சு நாள் ஆயிருக்கும்.ஒரு நாள் நைட் ஜூலி லேசா முனகிட்டு இருந்துச்சு. அதோட சாக்கு படுக்கையில படுத்துக்காம எழுந்து போய்டுச்சு. "அம்மா எங்க போகுதுன்னு போய் பாப்போமா" ன்னு கேட்டதுக்கு, "அதெல்லாம் வேணாம், பேசாம படுங்க" ன்னு சொல்லிட்டாங்க. காலைல அம்மா சொன்னாங்க, "ஜூலி குட்டி போட்டுடுச்சு. ஆனா எங்க போட்டு வெச்சுருக்கு, எத்தனை குட்டி போட்டுருக்கு ஒன்னும் தெரியலை" ன்னு.

நானும் தம்பியும் துப்பு துலக்கி ஜூலி பின்னாடியே போனோம். அது அந்த ஆத்து மணல் குவியல்ல ஒரு பொந்து மாதிரி பண்ணி அதுக்குள்ள போய்டுச்சு.
"அம்மா! ஜூலி மண்ணை தோண்டி பொந்து மாதிரி செஞ்சு அதுக்குள்ள குட்டி போட்டு இருக்கும்மா, ஆனா எத்தனை குட்டி தெரியலை" .
"ரெண்டு மூணு நாள் கழிச்சு அதுவே வெளிய வரும். இப்போதைக்கு நீங்க பக்கத்துல போய் வெக்காதீங்க, கடிச்சுட போகுது" ன்னாங்க அம்மா.

நானும் தம்பியும் மணலை சுத்தி சுத்தி வந்து பொந்துக்குள் எட்டி பார்த்தா எதாவது தெரியுதான்னு முயற்சி பண்ணிட்டு இருந்தோம். "அதோட வயிறு இருந்த சைஸ்க்கு ஒரு அஞ்சு குட்டியாவது போட்டு இருக்கும். ஆண் குட்டின்னா யாராவது எடுத்துட்டு போய்டுவாங்க. பெண் குட்டிய எல்லாம் என்ன பண்றது தெரியலை" ன்னு அம்மா ஒரே பொலம்பல். அப்பா ஜூலிக்கு ஸ்பெஷல் கவனிப்பு பண்ணிட்டு இருந்தாங்க.நானும் தம்பியும் ஒரு தேடலுடனேயே இருந்தோம்.

ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஜூலி postpartum sickness எல்லாம் முடிஞ்சு சகஜமா வால் ஆட்ட ஆரம்பிச்சது. அன்னைக்கு சாயங்காலமே அதோட குட்டியை எங்க கண்ணுல காட்டிட்டுது. எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏன்னா ஒரே ஒரு குட்டி தான் இருக்கு ஜூலி கூட. கருப்பு கலர்(அதோட அப்பா மாதிரியா இருக்கணும்). பெண் பிள்ளை.



"நாய் பொதுவா ஒரே ஒரு குட்டி போடாது, ஒரு வேளை மணல் ஏதும் சரிஞ்சு மத்த குட்டில்லாம் செத்து போச்சான்னு" அம்மா கவலை பட, எனக்கும் தம்பிக்கும் தூக்கி வாரி போட்டது. மொத்த மணலையும் கவனமாக அகற்றி, துழாவி துருவி தேடினோம். ஒன்னும் அகப்படலை.

தனிக்காட்டு ராஜா(ஜி)வாக வளர்ந்தது ஜூலியோட குட்டி. போட்டிக்கு ஆள் இல்லாம வயிறு முட்ட பால் குடித்து, 'மொத்த அம்மாவும் எனக்கே எனக்கு' ன்னு பெருமையாக வளர்ந்ததில் மூன்றே வாரத்தில் ஒரு முயல் அளவுக்கு வளர்ந்து நின்றது. ஒரு நாள் அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் ஜூலிக்கும் குட்டிக்கும் பிஸ்கட் கொடுத்து கொண்டு நான் அம்மா, தம்பி timepass பண்ணி கொண்டு இருந்தோம்.

"டீச்சர்....டீச்சர்.... " என்று சன்னமாக அழைத்து கொண்டே தலையை குனிந்து கொண்டு ஹரன்.
"என்னப்பா"
கையில் இருந்த கூடைக்குள் இருந்து எதையோ வெளியில் எடுக்கிறான், அதும் கருப்பும் வெள்ளையும் கலந்த கலரில்...துளியூண்டாக ...எலி மாதிரி....
"என்னை மன்னிச்சுடுங்க டீச்சர். சார் கிட்ட எப்டியாவது நீங்க தான் சொல்லணும். ஜூலி ரெண்டு குட்டி போட்டு இருந்துச்சு, கேட்டா தருவீங்களோ என்னவோன்னு நான் தான் இத யாருக்கும் தெரியாம தூக்கிட்டு போயிட்டேன், ஆனா சரியா சாப்பிட மாட்டேங்குது, செத்துடும் போலிருக்கு, அதான் திரும்பி கொண்டு வந்துட்டேன்" என்கிறான். கிட்டத்தட்ட அழுதான்.


அது ஆண் பிள்ளை. பிள்ளை பூச்சி சைஸ்ல இருக்கு. பாவம் கண் கூட முழிக்காத குட்டிய திருடிட்டு போய் இருக்கான் கிராதகன்.
"சரிப்பா ஏதோ இந்த மட்டும் கொண்டு வந்தியே, அதோட அம்மா கிட்ட பால் குடிச்சுதுன்னா பொழச்சுடும், கொஞ்சம் தேறினதும் நீயே எடுத்து போய் வளரு" - அம்மா.

அப்றோம் ஜூலியும் அதோட ரெண்டு குட்டியுமா அமளி பட்டது வீடு. இரண்டு வாரங்களிலேயே அந்த சின்ன குட்டியும் தேறி விட, ஹரன் வந்து அப்பாவிடம் கேட்டு எடுத்துட்டு போனான்.

எங்க தெருப்பகுதியில் ஒருத்தர் அடிக்கடி வந்து குரங்கை வைத்து வித்தை காட்டுவார். "ஆஞ்சநேயர் தனியா இருக்கார்ம்மா, அவர் கூட வெளாட ஒரு வைரவர் கொடுங்கம்மா" என்று அந்த பெண்குட்டியை கேட்டு அடம் பண்ணார். "அடிக்காம பத்ரமா பாத்துக்கோங்க,அப்போப்போ கொண்டு வந்து கண்ணுல காட்டுங்க" என்று கண்ணீருடன் அடுத்த குட்டியையும் அவரிடம் கொடுத்தாகி விட்டது.

அப்பா போன பிறகு, அந்த வீட்டை விட்டு நாங்களும் போய் விட்டோம். ஜூலி எங்களுடன் வர வில்லை. சில மாதங்கள் கழித்து நானும் தம்பியும் வீடு காலி பண்ண அந்த வீட்டுக்கு போன போது மறுபடி ஜூலியை பாத்தோம். உண்டாகி இருந்தது.

பின்குறிப்பு: நாய்க்கதை பிடித்து இருந்தால் சொல்லுங்கள். அடுத்து ஒரு பேய்க்கதை சொல்லுகிறேன்.

Tuesday, 27 October 2009

இட்லிவடைக்கு ஆறு வயது.

கடந்த வருடம் மாதிரியே இந்த முறையும் இட்லிவடையின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியாகி விட்டது.

"ரொம்ப நன்றாக அனுபவித்து, நுணுக்கமாக, நுண்ணரசியல் தூவி எழுதிஉள்ளீர்கள்." என்று பாராட்டும் கிடைத்தது, "உங்க கிட்ட பேசவே பயமா இருக்கு, ரவுடித்தனம் பண்ணிருக்கீங்க பதிவுல" என்று பாட்டும் கிடைத்தது.

இட்லிவடையை 'சமத்தா இருங்க' ன்னு சொல்லி இருக்கேன். ஆனால்,போன வருட பதிவையும், இந்த வருட பதிவையும் ஒப்பிட்டு படித்தால் எனக்கு தான் வால்தனம் அதிகமாகி விட்டது.

இட்லிவடை என்னை கொள்கை பரப்பு செயலாளர் ஆக்குவதாக சொல்கிறார்.
அவருடைய காபினெட்டில் "துணை முதல்வர்" பதவியே கொடுத்தாலும் வேண்டாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். :-)

Friday, 16 October 2009

Greetings!!!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


சத்தியமாக சற்று முன் நானே செய்த ரசமலாய்.






ரசமலாய் இங்கிருந்து ரெசிப்பி
பார்த்து செய்தது.

நான் ரசமலாய் செய்ய போகிறேன் என்று சொன்னதும் "ஐயோ பாவம் உங்க வீட்டுல எல்லாரும்' என்று வெகுவாக கவலைப்பட்ட சிலருக்காகவும், "எதற்கும் செய்து முடித்த பிறகு ஸ்வீட்க்கு பெயர் வை" என்று மேதாவி ஐடியா கொடுத்தவர்களுக்காவும் இந்த படத்தை உடனே அச்சேற்றி விட்டேன். நானே சற்று பயத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனாலும் "சரியாக வரலைன்னா எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கிண்டி, 'பாசுந்தி' என்று பரிமாறி விடு" என்ற என் தம்பி கொடுத்த தைரியம் கை கொடுத்தது.
வீட்டில் சாப்பிட்டு பார்த்து 'சூப்பர்' என்று சர்டிபிகேட் கிடைத்ததும் விட்டது.

ஒரு கொசுறு தகவல்: நரகாசுரனை வதம் செய்ததை தான் தமிழ் நாட்டில் தீபாவளியாக கொண்டாடுகிறோம். கர்நாடகாவில், மகாபலி பூமியில் மக்களை சந்திக்க வரும் நாளாகவும்(கேரளாவில் மகாபலியின் வருகை ஓணம் பண்டிகையாக கொண்டாட படுகிறது), வட இந்தியாவில் ராமர் அஞ்ஞான வாசம் முடிந்து நாடு திரும்பிய நாளாகவும் தீபாவளியை கொண்டாடுவதாக இன்று தான் அறிந்து கொண்டேன்.
With that, Wishing each of you a very happy, colourful, sweet and safe Deepavali. God Bless.



Tuesday, 25 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 6

ஏழாவது படிக்கும் போது தான் சுவாமி விவேகானந்தரின் அறிமுகம். விவேகானந்தா மிஷன் 'சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்" புத்தகத்தில் இருந்து ஒரு போட்டி நடத்தினார்கள். அப்போதிலிருந்தே சுவாமிஜி என்றால் ஒரு ஆர்வம். என் ஹிந்தி சார் வீட்டில் மூன்றடி உயரத்திற்கு விவேகானந்தரின் சிலை வைத்து இருப்பார்கள். டியூஷன் அப்போ, அந்த சிலைக்கு பக்கத்தில் தான் உக்காருவேன். கன்யாகுமரி விவேகானந்தர் பாறை போக போகிறோம் என்றதும், உற்சாகம் பீறிட்டது.திருவள்ளுவர் சிலையையும் பார்க்க போவது இதான் முதல் முறை.

26-June-2009 2PM

"நாலு மணிக்குள் போகலைன்னா, cruise டைம் முடிஞ்சுடும். அப்றோம் விவேகானந்தர் பாறையை எல்லாம் தூரமா இருந்து பாத்துட்டு வர வேண்டியது தான்" மறுபேச்சு பேசாமல் சொன்ன நேரத்துக்கு ரெடி ஆயிட்டேன்.

"இது தான் மருந்து வாழ் மலை. அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு போகும் போது, அதில் இருந்து கீழே விழுந்த ஒரு துண்டு. இங்க உள்ள கீரைய பறிச்சு சாப்பிட்டால் எந்த நோயும் குணமாகும்"
நாகர்கோயில் - கன்யாகுமரி வழியில்,ஒரு மலையை காண்பித்து அவரோட அத்தை சொன்னது.

உடனே cruise டிக்கெட் வாங்கிக்கொண்டு, ஏறி உக்கார்ந்தோம். கரையில் இருந்து பாறைக்கு செல்ல ஆகும் அதிக பட்ச நேரம் ஐந்து நிமிடம். அதற்குள் இரண்டு வட இந்திய குடும்பங்களுக்குள் சண்டை வந்து விட்டது. எதற்கு என்றால், ஒருவர் துண்டு போட்டு ரிசர்வ் செய்து வைத்து இருந்த இடத்தில், இன்னொருவர் வந்து உக்காந்து விட்டார். அப்பா அப்பாவுடன், அம்மா அம்மாவுடன், அண்ணன் அண்ணனுடன் என்று அவரவர் வயதில் உள்ளவர்களுடன் வாய்ச்சண்டையில் ஆரம்பித்தது கைகலப்பில் முடிய இருந்ததற்குள், இறங்க வேண்டிய இடமே வந்து விட்டது.
"சாலா" "பாகல்" என்றெல்லாம் திட்டிக்கொள்கிறார்களே? அப்டின்னா என்ன?" கேட்டது அவரோட அத்தை பெண்.

முதலில் கன்யாகுமரியின் நினைவகம். ஒரு ஜோடி பாத அடையாளங்களை கண்ணாடி சட்டம் போட்டு வைத்து இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் எல்லாம் அதன் மீது காசு எறிகிறார்கள்.
"कौन है कन्याकुमारी? उसकी बाप कौन है?" கேட்டுக்கொண்டே காசை போட்டது சண்டை போட்ட குடும்பத்து பெண். அப்போது தான் கவனித்தேன். அங்கு குமரியின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் மாத்திரம் தான் எழுதி வைத்திருக்கிறார்கள்.விளைவு? குமரியின் அப்பா யாருன்னு கேட்கிற அவலம்.ஹிந்தியிலும் எழுதி தொலைத்து இருக்கலாம்.

விவேகானந்தர் பாறையின் சிறப்பம்சம் அங்கிருக்கும் சுத்தமும், அமைதியும் காற்றும் தான். அங்கு வரும் சுற்றுலா பயணிகளும், ஒரு ஒழுங்குக்கு வந்து விடுகிறோம். யாரும் குப்பை போடுவதில்லை, எச்சில் துப்புவதில்லை, தேவையில்லாத சத்தம் இல்லை. இத்தனைக்கும் நல்ல கூட்டம் வேறு. சண்டை போட்ட அந்த குடும்பங்கள் கூட, ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்ள வில்லை. குமரியின் பாத தரிசனம் முடிந்து, விவேகானந்தர் மண்டபத்துக்குள் நுழைந்தோம். தாஜ்மகாலை சினிமாக்களில் பார்த்து விட்டு, முதல் முறை நேரில் போகும் போது, "அட இவ்ளோ பெரிசா" என்று தான் முதலில் பிரம்மிப்போம். அதே தான் இங்கேயும். ஏற்கனவே சின்ன வயசில் பார்த்து இருந்தாலும் கூட, இந்த முறை "இவ்ளோ பெரிசா" என்று ஒரு ஆச்சர்யம் முதலில் ஏற்பட்டது. முதலில் ஒரு பெரிய அறை. அங்கே பளபளவென்று சுமார் பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் சுவாமிஜியின் சிலை. ஒருவர் அங்கே வருபவர்களை எல்லாம் பேசாதீர்கள் என்று செய்கை செய்த படி தூண்களை எல்லாம் துடைத்து கொண்டு இருந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டும் என்ற ஆவலை அடக்கி கொண்டேன்.

அடுத்து தியானம் செய்யும் அறை. மெல்லிய வெளிச்சத்தில் ஓம் ஓம் என்ற மிக மெல்லிய ஒலியின் பின்னணியில், ॐ என்று எழுத பட்டு இருக்கும் ஒரு திரையை நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறார்கள். தியானம் செய்தோமா என்றெல்லாம் தெரியாது ஆனால் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு வெளியே வந்தோம்.

ஒரு கடை வைத்து விவேகானந்தர் சிலை, சிற்பம், புத்தகம் என நினைவுச்சின்னங்கள் விற்பனை செய்கிறார்கள். "Swamy Vivekananda on himself" என்று ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டேன். விவேகானந்தர் பாறையில் இருந்து பார்த்தால் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது வள்ளுவன் சிலை. அங்கே போவதற்கு படகு போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றம் தான்.

அடுத்ததாக குமரியம்மன் தரிசனம். அம்மனின் மூக்குத்தி தான் விசேஷம். கப்பல்களுக்கு எல்லாம் கரை காட்டும் விளக்காக இருந்ததாம் இந்த மூக்குத்தி. உண்மையில் ஏதோ விளக்கொளி சுடர் விடுவதைப்போல மின்னுகிறது.

கடற்கரையில் 'பொங்கி வரும் கடல் அலையை ஒரு கை தடுப்பதை' போன்று சுனாமி நினைவுச்சின்னம் அமைத்து இருக்கிறார்கள்.

திரும்பி வரும் வழியில் ஒரு குறுகலான சந்தில் பார்க் பண்ண போக, காரில் அடுத்த டென்ட். கண் திருஷ்டி.இந்த முறை தடம் பலம்.:-(

27-June-2009
அடுத்த நாள் சனிக்கிழமை,மாமியாரின் குடும்ப கோயில் விசிட். சில உறவினர்களை சந்தித்தோம். திருமணத்துக்கு முன்பு வரை எனக்கு ரஸ்தாளி, பூவன், கற்பூரவல்லி, பச்சை பழம் என்று வாழைப்பழ வகைகள் தான் தெரியும். அப்பறம் தான் பேயன், மட்டிப்பழம்,சிங்கம்பழம், செந்துளுவன் இதெல்லாம் தெரிய வந்தது. மற்ற ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களை மட்டும் தான் பெயர் சொல்லி சொல்கிறார்கள். மற்றபடி பழம் என்றாலே வாழைப்பழம் தான். காலை காப்பியில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை, எல்லா உணவுடனும் வாழைப்பழம் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அன்று மாலை ஒரு செட் ஊருக்கு கிளம்பினார்கள். விடை அனுப்ப railway station போன இடத்தில் குழந்தைகள் ஒன்றை ஒன்று கட்டி கொண்டு அழுது பிரியா விடை பெற்றன.

28-June-2009
ஞாயிறு அதிகாலை return பெங்களூருக்கு கிளம்பினோம். வரும் வழியில் மறுபடியும் திருநெல்வேலி அல்வா. காலை 7:30மணிக்கு வாங்கின போதும் அதே சூடு. கயத்தாறில் கட்டபொம்மன் சிலைக்கு கீழே உட்கார்ந்து கொண்டு வந்த காலை உணவு, வழியில் கோவில்பட்டியில் ஒரு மர நிழலில் மதிய உணவு. இரவு உணவுக்கு மறுபடி ஆனந்த பவன், என்று ஒரே மூச்சாக இரவு தூங்க வீட்டுக்கு வந்துவிட்டோம். உறவினர்கள், கடல், அருவி, குழந்தைகள், கோவில், திருமணம் என்று ஒரு வாரம் ஓடியதே தெரிய வில்லை.

So how is life now?
"அடுத்த கல்யாணம் எப்போ வரும்? இதே மாதிரி இன்னொரு ட்ரிப் போகலாம்" என்று பார்த்து கொண்டிருக்கிறேன்.

அட கண்ணனும் சஞ்சயும் இப்போ எதுக்கு இப்டி அழுவறீங்க? அப்டி என்ன ஆகி போச்சு? ஒரு தொடர் ன்னு ஆரம்பிச்சா அது முடிஞ்சு தான ஆகும்? இதுக்கு போயி மனச தளர விடலாமா??

......

என்ன அதுக்கு அழுவலையா? பின்ன என்ன?

......

என்னது? இன்னொரு முறை இப்டி ஒரு தொடர் எழுத மாட்டேன்னு சத்தியம் பண்ணனுமா?



-பயணம் சுபம்.

Tuesday, 18 August 2009

From Today's Playlist :-)

இசை என்று ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லாமல் போனால், நிறைய பேருக்கு பைத்தியம் பிடிச்சுடும். ஏதோ ஒரு வடிவத்தில் இசைக்கு எல்லோருமே அடிமை தான்.

"இளையராஜாவின் "How to Name it?" கேட்டு இருக்கீங்களா??"
"இல்லை"
"கேட்டதில்லையா...ச்ச, வேஸ்ட் நீங்க"

இசையை பொறுத்த வரை என்னுடைய எல்லை ரொம்ப ரொம்ப சின்னது.
நம்ம எதுக்கு மியூசிக் கேக்குறோம்? மகிழ்ச்சியை பகிர்ந்துக்க, துக்கத்தை வடிக்க, தனிமைய போக்க, பொழுது போக, தூக்கம் வர, கடவுளை உணர...etc etc.
இந்த மாதிரி ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரியான தேடலுடன் மியூசிக் கேட்போம்.

இந்த தேடலுக்கு எல்லாம் விடை சிலருக்கு "How to name it"டில் கிடைக்கலாம். எனக்கு சினிமா பாட்டுலேயே கெடைச்சுடுது.
இதை 'குறுகிய ரசனை' ன்னு ஆதங்கப்படும்/'வளர்த்துக்கொள்ள சொல்லி' அக்கறைப்படும் நண்பர்களுக்கு நான் சொல்றது இதான்,
"எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்...:-(
இப்போதைக்கு எனக்கு அதுவே போதுமானதா இருக்கு."

லகான் படத்துல "Radha kaise na jale" ன்னு ஒரு பாட்டு வரும். என்னோட சந்தோஷத்தை இரட்டிப்பாக்க அது போதும்."காதலின் தீபம் ஒன்று" பாட்டை விட ரொமான்டிக் ஆன ஒரு பாட்டு இன்னும் வந்துடலைன்னு எனக்கு ஒரு நம்பிக்கை. எப்போல்லாம் தனியா இருக்க மாதிரி உணர்கிறேனோ, அப்போல்லாம் "Tanhayee(Dil Chahta Hai)" பாட்டு எனக்காக அழும்.

சரி எனக்கு பிடிச்ச பாட்டு லிஸ்ட் சொல்லி பிட் போடுவதற்காக அல்ல இந்த பதிவு.
மேட்டர்க்கு வரேன்.

இந்த மாதிரியான என்னோட limited horizon னில் இருந்து சில கேள்விகள்.

கூகிள் பண்ணாம பதில் சொல்லுங்க பார்க்கலாம்.


1)உன்னி கிருஷ்ணனும், உதித் நாராயணனும் சேர்ந்து பாடின பாட்டு சொல்லுங்க.

2)அனுராதா ஸ்ரீராம், மாதங்கி சேர்ந்து பாடின பாட்டு?

3)"வளையோசை கல கலவென", "ஓ பட்டர்பிளை" இந்த ரெண்டு பாட்டுக்கும் என்ன ஒற்றுமை?

4)இசைஞானியின் நானூறாவது படத்துல, அவரே பாடின பாட்டு என்ன?

5)Musically Connect: அபூர்வ ராகங்கள். பதினாறு வயதினிலே, சிந்துபைரவி, மின்சாரகனவு,கருத்தம்மா, அழகி, பாரதி, ஆட்டோக்ராப்

Saturday, 8 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 5

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இப்போது மணமகன் மணமகளுக்கு மங்கள நாண் அணிவிப்பார்.

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று மணவிழா காணும் மணமக்களை...

இப்படியான ஒரு பகுத்தறிவு கல்யாணம் எனக்கும் கதிருக்கும்.

நோ ஹோமம், நோ மாங்கல்யம் தந்துனானே etc etc.

ஒரு விதத்தில் எனக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் என் புகுந்த வீட்டு திருமண சடங்குகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல். சிலர் திருமண ஆல்பம்,DVD பார்த்ததில் ஓரளவுக்கு ஐடியா இருந்தாலும், நேரில் பார்க்க போவது இன்று தான் முதல் முறை. மூர்த்திக்கும் பூரணிக்கும் கல்யாணம். அம்மா அப்பா பார்த்து வைத்த மணமகள், மணமகன். சமத்து பிள்ளைகள்.

25-June-2009
அதிகாலையில் என் முதல் நாத்தனாரின் குடும்பம் வந்து சேர்ந்ததில் இருந்தே எல்லாருக்கும் கல்யாண பரபரப்பு தொற்றிக்கொண்டது.
'சீக்கிரம் குளிங்க எல்லாரும்'

'குழந்தைகளை குளிப்பாட்டி டிரஸ் பண்ணி அவங்கவங்க அப்பாவிடம் விட்டு விட்டு அப்றோம் நம்ம saree கட்டலாம்.'

'நம்ம கல்யாணத்தன்னைக்கு கட்டினது, அதுக்கு அப்றோம் இன்னைக்கு தான் இந்த பட்டு கட்டறேன்'
'iron பண்ண போன எடத்துல கூட "சார் saree ரொம்ப நல்லா இருக்கு, நீங்க எடுத்ததா சார்? உங்க wife குடுத்து வெச்சவங்க" ன்னு சொல்றான்.'
'அவனுக்கென்ன? அவன் சொல்வான். By the way, இந்த white and white வேஷ்டி சட்டைல அரசியல்வாதி மாறி இருக்கீங்க. துண்டு தான் மிஸ்ஸிங்.'

"கல்யாணத்துக்கு கல்யாணம் தான் தலையில் பூ வெக்குறது. அதை இன்னும் கொஞ்சம் தாராளமா வெச்சா என்ன?"

"இந்த necklace கொக்கி கொஞ்சம் மாட்டி விடேன்"

பெண்கள் எல்லாரும் புடவை கசங்காமல் மேக்கப் கலையாமல் மண்டபத்தில் கொண்டு விடப்பட்டோம். கதிருக்கும் அவருடைய காருக்கும் ஒரே பாராட்டுகள். Go Fida.

டிபன் முடிந்ததும் மாப்பிள்ளை அழைப்பு.

மாப்பிள்ளை வீட்டார் அதாவது நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி இருக்க, மணமகளின் தம்பி வந்து மாப்பிள்ளைக்கு மாலை போட்டு, பன்னீர் தெளித்து, கைகளில் சந்தனம் தடவி, (இதுவே வயதில் பெரியவர் ஆக இருந்தால் நெற்றியில் பொட்டு வைப்பார்களாம்) மேள தாளத்துடன் (உங்கள் யாருக்காவது ஒரு பலிகடா effect கிடைத்தால் நான் பொறுப்பில்லை.அங்கே நடந்ததை சொல்கிறேன்)எங்க எல்லாரையும் மண்டபத்துக்கு அழைத்து செல்கிறார்கள். மண்டபத்திற்குள் நுழையும் முன், மாப்பிள்ளைக்கு பாதம் கழுவுகிறான் மணமகளின் தம்பி. அதற்கு பரிசாக அவனுக்கு மாப்பிள்ளை ஒரு மோதிரம் போடுகிறார்.

நேராக மாப்பிள்ளையை மணமேடையில் கொண்டு போய் அமர வைத்து திருமண பொழுதில் அணிய வேண்டிய உடையை மணமகளின் தாய்மாமா தருகிறார்.
மாப்பிள்ளை உடை அணிய சென்று விட, மணமகளை மேடைக்கு அழைத்து அவளுக்கு முகூர்த்த புடவையை மணமகனின் அக்கா தருகிறாள்.அந்த பெண்ணும் உடை மாற்ற சென்று விடுகிறது. இதற்குள் மாப்பிள்ளை உடை மாற்றி (ஒரு வேஷ்டி சட்டை மாற்ற எவ்வளவு நேரம் ஆகி விட போகிறது, எங்களை மாதிரியா?)
வந்துவிட, மேடையில் அமர வைத்து 'உரிமா கட்டுதல்' என்று ஒரு சடங்கு நடக்கிறது.
அதாவது மாப்பிள்ளைக்கு உரிமை உள்ள ஆண்கள் அனைவரும், சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான், அண்ணன், அத்தான், என்று ஏகப்பட்ட பேர் வரிசையில் வந்து மணமகன் தலையில் தலைப்பாகை கட்டுகிறார்கள். வயதான சிலர் பயபக்தியோடு சின்சியராக கட்ட, பலர் கேலியும் கிண்டலுமாக கலாய்த்தபடி.
கலர் கலராக blouse துணியில். மாப்பிள்ளை வீட்டு பெண்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த புடவைக்கும் matching blouse தேடி அலைய வேண்டியதில்லை. அவ்வளவு துணிகள் வந்து குவிகிறது.
"உங்க கல்யாணத்தில் கதிரை நல்லா ஓட்டனும் என்று இருந்தோம். வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது." என் நாத்தனார் கணவர் உரிமா கட்டும் வரிசையில் இருந்து விலகி வந்து என்னிடம் கிசுகிசுத்து விட்டு போனார்.

"இந்த சடங்கிலும் ஒரு நன்மை இருக்கு பாத்தியா?பொண்ணுக்கு புடவை மாற்ற நல்ல டைம் கிடைக்கும் இல்ல?"
"உங்கள் பகுத்தறிவு பார்வைக்கு திரிஷ்டி சுத்தி போடணும்ங்க."
"நக்கல் ஜாஸ்தி உனக்கு. பகுத்தறிவுக்கே திருஷ்டியா?இரு இதையெல்லாம் ஒரு நாள் எங்கப்பா கிட்ட போட்டு குடுக்குறேன்."
":-)"

ஒரு வழியாக பெண் உடை மாற்றி வந்து விடுகிறது. வழக்கமான விமர்சனங்கள். புடவை பற்றி, நகைகள் பற்றி, மேக்கப் பற்றி. இதெல்லாம் ஊருக்கு ஊரு மாறாது போல்.
என் அம்மா வீட்டு சைடு, தாய் மாமா, மாமிக்கு தான் சகல மரியாதை கிடைக்கும். மூணாவது முடிச்சுக்கு மட்டும் தான் அக்காவை அழைப்பார்கள்.
ஆனால் இங்கோ மாப்பிள்ளையின் அக்காவுக்கு அதி முக்கித்துவம் கொடுக்கிறார்கள். மேடையில், புரோகிதர், மணமக்களுடன், அந்த அக்காவுக்கு மட்டும் தான் இடம் கொடுக்கிறார்கள். எல்லா சடங்கையும் அவளை விட்டு தான் செய்ய சொல்கிறார்கள். ஆனால் இந்த கல்யாணத்தின் அக்கா ஒரு சாப்ட்வேர் அக்கா. புரோகிதரின் கட்டளைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், புடவையை இழுத்து பிடித்துக்கொண்டு தடுமாறியது.
டும் டும் டும். தாலி கட்டியாகி விட்டது. அடுத்து திருநீறு பூசும் படலம். அதற்கும் ஒரு பெரிய வரிசை. ஆனால் இதில் பெண்களும் உண்டு. கதிர் தான் மணமகனுக்கு ஒரே அண்ணன், அதனால் மைனி (அண்ணி) திருநீறுக்கு, என்னை தான் அழைத்தார்கள். ரொம்ப பெருமை எனக்கு.

மதிய உணவில் பருப்பு சாதத்தில் அப்பளம் உடைத்து போட்டு சாப்பிடுகிறார்கள். கலர்கலராக மூன்று பாயசம் வைக்கிறார்கள்.
அன்றைக்கு மாலை reception. அதாவது முகூர்த்த நாள் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறும் என்பதால், காலையில் வர இயலாதவர்கள், வாழ்த்த வருவதற்காக ஏற்படுத்தப் பட்டது தான் இந்த reception பழக்கமாம். இப்போது அது ஒரு போட்டோ session என்ற அளவில் மாறி விட்டு இருக்கிறது. Orchestra வைப்பதும் சமீபத்திய முன்னேற்றம். reception முடிந்து வைக்கும் சடங்குக்கு பேர் 'நாலாம் நீர்'. இதென்ன நாலாம் நீர் என்றால், அந்த காலத்தில் திருமணத்தின் ஒவ்வொரு சடங்குக்கு முன்னதாகவும் மாப்பிள்ளையும் பெண்ணும் நீராட்ட படுவார்களாம். இது நாலாவது நீராட்டு என்பதால் அந்த பெயர். இப்போது வெறும் பெயர் மாத்திரம்.பெண் தலையில் மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தலையில் பெண்ணும் அப்பளம் உடைக்கிறார்கள். பின்னாளில் ஒருவர் மண்டையை ஒருவர் உடைப்பதற்கு ஒரு நல்ல ஒத்திகை.பிறகு பித்தளை தேங்காய் உருட்டுகிறார்கள்.இதை பார்த்துக்கொண்டே இருந்த அர்ஜுன் விடு விடுவென்று மேடைக்கு போய் ஒரு அப்பளத்தை எடுத்து தன் தலையில் தானே உடைத்து கொண்டான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க, "உன் புள்ளைக்கு பொண்ணு பாருடீ, கல்யாண ஆசை வந்து விட்டது" என்று என்னையும் சேர்த்து வாரினார்கள்.

"சுருள்". மாப்பிளைக்கு உறவுக்காரர்கள் எல்லாரும் மொய்ப்பணம் வைக்க வேண்டும்.
"நீ மைனி சுருள் வை" என்று எனக்கு பணம் கொடுத்தார் கதிர். இந்த பணம் எல்லாம் மாப்பிளையின் அக்காவுக்காம். கொள்ளை வசூல்.இது முடிந்து எல்லாருக்கும் முறுக்கு தருகிறார்கள். பெண் வீட்டில் செய்தது. "முறுக்கு நல்லா இருக்கு" என்று பெண் வீட்டாரும் "இன்னும் கொஞ்சம் உப்பு போட்ருக்கணும்" என்று மாப்பிள்ளை வீட்டாரும் சொல்லி கொண்டே நொறுக்குகிறார்கள்.
பிறகு இரவு உணவு. தீயலும் சோறும். தீயல் என்பது தேங்காய், மிளகாய், மல்லி எல்லாம் வறுத்து செய்யும் ஒரு குழம்பு. வத்தகுழம்பின் ஒரு வடிவம். என் மாமியார் சமைப்பதில் எனக்கு ரொம்ப பிடித்தது இது தான்.

உணவிற்கு பிறகு மாப்பிள்ளையை பெண் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.எங்கள் ஊரில் சாந்தி கல்யாணம் மாப்பிள்ளை வீட்டில் நடக்கும். "பெண் என்பவள் வளைந்து கொடுக்க தெரிந்தவள்.எங்கும் சமாளித்து விடுவாள். ஆண்களுக்கு தான் புது இடம் பழக நேரம் ஆகும்" என்று காரணம் சொல்வார்கள். இவங்க அப்டியே மாத்தி சொல்றாங்க. Good actually.

மறுநாள் காலை, நாங்கள் சிலர் மாத்திரம் கிளம்பி பெண் வீட்டுக்கு சென்றோம். அடுத்த சடங்குக்கு பெயர் "ஏழாம் நீர்" . "ஐந்தாம் ஆறாம் நீர்லாம் எங்க?" என்று கேக்க வில்லை நான். ஏற்கனவே ஏகப்பட்ட கேள்வி கேட்டு நச்சரித்ததால் என் பக்கத்தில் வருவதற்கே என் புகுந்த வீட்டினர் சற்று பயந்த மாதிரி தோணுச்சு.அங்கே பொங்கல் வைத்து, படைத்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமர வைத்து ஒரு பொம்மையை தட்டில் வைத்து அவர்கள் கையில் குடுத்து, "சரி புள்ளைக்கு எல்லாரும் பணம் போடுங்கள்" என்கிறார்கள்.என்னது ஒரே இரவில் புள்ளையா? பகுத்தறிவுவாதிகளை ஒரேடியாக குறையும் சொல்லி விட முடியாது...:-)
அட மறுபடியும் வசூல். அந்த பணமும் பையனின் அக்காவுக்கு தானாம்.என் தம்பி கல்யாணத்தை நாகர்கோவிலில் வைக்க சொல்ல வேண்டும்.

மூர்த்தி கல்யாணம் இனிதே நிறைந்தது. இல்லை இல்லை இனிமே தான ஆரம்பம்...:-)

- இன்னும் பயணம்(கன்னியாகுமரி)