Thursday 26 February 2009

நான் தனியாள் இல்ல!!!

"அப்டி blog எழுதி நீ என்னத்தை கிழிச்ச்ச்ச? அதுல செலவு பண்ற நேரத்துல இன்னும் கொஞ்சம் standards படிச்சுருந்தாலோ, இன்னொரு scripting language கத்துட்டு இருந்தாலோ, இல்ல அட்லீஸ்ட் MS.Office applications ல எத்தனை மாயாஜாலம் பண்லாம்?? அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுருந்தாலோ, வேலைக்கு உதவியா இருந்து இருக்கும்"


"வாழ்க்கைல பண்ற எல்லாம் விஷயங்களும் materialistic ஆக, measurable output குடுக்குறதா தான் இருக்கணுமா? நமக்கு பிடிச்ச, நமக்கு satisfaction தர்ற , விஷயங்கள், அது மத்தவங்கள தொந்தரவு பண்ணாத வரைக்கும், பண்றதுல என்ன தப்பு இருக்கு?அப்டியே measurable output தான் வேணும்னா கூட, இங்க வந்ததுல நான் எவ்ளோ நண்பர்களை சம்பாதிச்சுருக்கேன் தெரியுமா?"


"எங்க அவங்கள பத்தில்லாம் சொல்லு பாக்கலாம்"




ஜெயஸ்ரீ
ஏகலைவனுக்கு துரோணர் மாதிரி எனக்கு ஜெயஸ்ரீ. (அதுக்காக டைப் பண்ற வெரலை எல்லாம் வெட்டி அனுப்புன்னு சொல்லிடாதீங்க J!)அதிகமா பேசி பழகிக்காமலேயே இவங்க பதிவுகளை படித்தே, எழுத கத்துக்கிட்டேன்.
இவங்களுடைய 'மீண்டும் ஒரு காதல் கதை'யை படிச்சு, "இப்டில்லாம் கூட எழுத முடியுமா?' என்று மருகி, உருகி இருக்கிறேன்.ஒவ்வொரு முறை அந்த கதையை படிக்கும் போதும்(ஆச்சு இதோட ஒரு முப்பது முப்பத்தஞ்சு முறை), முதல் தடவை படித்த போது கிடைத்த அதே சந்தோஷமும் நிறைவும் கிடைக்கும். நம்மளும் தமிழ்ல எழுதணும் ன்னு எனக்குள்ள ஒரு சின்ன ஆர்வம் துளிர் விட்டுச்சுன்னா அதுக்கு முழுக்க முழுக்க இவங்க தான் காரணம்.முதல் தமிழ் பதிவா அர்ஜுன் பதிவை எழுதி இவங்களுக்கு (இவங்க பதிவிலேயே பின்னூட்டமாய்) அனுப்பிட்டு, "Ultra sound scan result' க்கு காத்திருந்த அதே தவிப்புடன் காத்திருந்தேன். ஒரு smiley யும், "ஆங்கில வார்த்தைகளை குறைத்து கொள்ளுங்கள் " என்ற கருத்தும் மறுமொழியாய் வந்தது. இவங்களுக்கு தனிமடல் அனுப்பிட்டு , பதில் வருமா வருமா என்று நொடிக்கொரு தடவை inbox ஐ refresh பண்ணி பாத்துட்டு இருப்பேன். முதல் மடலுக்கு மூணு நாள் கழிச்சு பதில் வந்தப்போ, "you made my day" ன்னு கத்தணும் போல இருந்துச்சு. யாருக்காவது ரசிகையா இருக்கதுன்னா இது தானா??? ன்னு நெனைச்சுக்கிட்டேன். எனக்கு வரும் தனிமடல்களுக்கு எல்லாம் நான் உடனுக்கு உடன் பதில் எழுதுவதற்கு அன்னைக்கு இவங்க கிட்ட இருந்து எனக்கு பதில் வந்தப்போ நான் அடைஞ்ச சந்தோஷம் தான் காரணம். கொஞ்ச நாள் தாளிக்காமல் இருந்து விட்டு சமீபத்தில் திரும்பி வந்து, எங்கள் வயிற்றில் எல்லாம் பதிவு வார்த்து இருக்கிறார்கள். எனக்கு இட்லிவடை தான் இவர்களை அறிமுகம் செய்து வெச்சது. அதுனால IV க்கு கடமை பட்டுருக்கேன்.:-)சமீபத்தில் "உங்கள் நான் கடவுள் விமர்சனம் படித்து மகிழ்ந்தேன். உங்கள் தமிழில் நல்ல வளர்ச்சி" என்று இவரிடம் இருந்து வந்த மடலை பார்த்து ரஹ்மானுக்கு ஆஸ்கார் அறிவித்த போது துள்ளியதை விட கொஞ்சம் அதிகமாகவே துள்ளியது மனது. பின்ன ?? சும்மாவா??சமீபத்தில் இவங்க "விகடன் வரவேற்பறை" ல வந்தப்போ, "Better late than never" என்று தான் தோன்றியது. She deserves it.



தேசிகன்
ஜெயஸ்ரீயின் பதிவுகளில் அடிக்கடி இவருடைய பெயர் தென்படும். அதனாலேயே இவரை ஏற்கனவே தெரிந்த மாறி உணர்வு, இருந்தாலும் இவரை பற்றி ரொம்ப curious ஆக்கியது இந்த பதிவு தான். ஒரு நாள் ஒரு வேலையாக ஆபீஸ் mail-room க்கு போய், அன்றைக்கு வந்து இருந்த தபால்களில் எனக்கு வர வேண்டியது வந்து இருக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்த போது, post from NHM to N.Desikan. NHM கிழக்கு மக்கள் ஆச்சே...அப்போ இவர் அந்த தேசிகனா இருக்குமோ என்று மண்டைக்குள் லைட் எரிந்தது. வந்து அவசரமா அவருடைய contact details தேடி, IM ல ping பண்ணி, நீங்க தானா அவர் என்று உறுதி செய்து கொண்டு, "ஓ, நீங்க ஏழாவது மாடியா? நான் மூணாவது..." என்று சந்தித்தும் ஆகி விட்டது. அது வரைக்கும் அவர் ஒரு பதிவர் என்று மட்டுமே நினைத்து கொண்டு இருந்த எனது அறியாமைக்கு , அவரை சந்தித்த பிறகு தான், "He is much more than just a blogger" என்று தெரிந்தது.ஆனால் மனிதர் மிக மிக எளிமை. அவருடைய படைப்புகளை பற்றின பெருமையோ, "சுஜாதா' அவர்களுடன் ,அவர் பகிர்ந்து கொண்ட நெருக்கமான நட்பை குறித்த கர்வமோ துளியும் இல்லை அவரிடம்.

"நீங்களும் பதிவு எழுதுகிறீர்களா? " என்று கேட்டு பதிவு முகவரி வாங்கி கொண்டார். சற்று தயக்கத்துடன் தான் கொடுத்தேன். ஆனாலும் இவர் எங்கே இதை எல்லாம் படிக்க போகிறார், ஒரு courtesy க்காக கேட்டு இருப்பார் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து அதை விமர்சித்து குறை நிறைகளை சுட்டி காட்டும் போது உண்மையிலேயே "அட" என்று இருக்கும் Three in one க்கு "Its interesting for a casual reading, but something is missing" என்று சொன்னவர், "கருவாச்சிக்கு" "Not bad" என்றும், கோயில் கொஞ்சம் பதிவுக்கு "one of the good posts, well written with with subtle humour" என்று சொல்லவும்... ஹையா நான் வளர்கிறேனே மம்மி!!!


"5 seater sofa வில் என் மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி எல்லாரும் சீரியல் பாக்க இடம் பிடித்து விட, என் மாமனார் Nilkama chair ஐ எடுத்து போட்டு உக்காந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார். மேகலாவில் இருந்து, சிவசக்தி வரை அசராமல் ரசித்து பார்க்கிறார்கள்" என்று கோயில் கொஞ்சம் பதிவில் நான் எழுதிய வரிகளை 'I am tempted to rewrite this' என்று சொல்லி, "எங்கள் வீட்டு சோபாவில் அன்று தான் மாமியார் உட்பட ஐந்து பேர் சேர்ந்து உட்காரலாம் என்று கண்டுபிடிச்சோம்.மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி என்று சோபாவும் சேர்ந்து சீரியல் பார்த்தது. மாமனார் சபாநாயகர் போல் தனி சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தார். இவர்களை பார்த்து நான் அசந்து போயிருக்க இவர்கள் அசராமல் மேகலாவிலிருந்து சிவசக்தி வரை பார்த்தார்கள்" என்று எழுதி காட்டி அசத்தினார்.

பேசாம இந்த சாப்ட்வேர் ஐ எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, "எழுத போங்க, இல்ல வரையுங்க" ன்னு சொன்னா, "இது 'புவ்வா' வுக்கு, மத்ததெல்லாம் பொழுது போக்கு" ன்னு சொல்கிறார்:-)

ச.ந.கண்ணன்.
இட்லிவடையில் எனது ஐந்தாண்டு பதிவை பார்த்து, "யார்டா இது?" என்று என் பதிவை எட்டி பார்த்தவர். கிழக்கில் எழுத்தாளர். அப்போலேர்ந்து தொடர்ந்து எனக்கு "எழுதுங்கள் எழுதுங்கள்" என்று ஊக்கம் கொடுத்து கொண்டு இருப்பவர்.சில நாட்கள் பதிவு போடலன்னா, "அம்மா தாயே, பதிவு பிச்சை போடுங்க" என்ற அளவுக்கு இறங்குவதும், பதிவு பிடிச்சுருந்தா அத ஊரு உலகத்துக்கு எல்லாம் தெரிய படுத்துவதும், பிடிக்கலைன்னா, "Not impressive at all" என்று வெளிப்படையாக குட்டுவதுமாக, என் பதிவின் ஒரு முக்கியமான விமர்சகர். சமீபத்தில் இட்லிவடையிடம் வாங்கி கட்டி கொண்டார். எனக்கு என்னமோ அது கண்ணனுக்கு கிடைத்த விளம்பர வாய்ப்பாகவே தோன்றியது.:-)


இவங்க மட்டுமா?
எந்திரன், சர்வம் என்று ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்க படங்களோட stills, அப்றோம் ஒலகத்துல எந்த நடிகை, நடிகருக்கு கல்யாணம்,காது குத்து, குழந்தை என்று எந்த நல்ல காரியம் நடந்தாலும், அந்த photos எல்லாத்தையும், எங்க இருந்தோ ஆட்டைய போட்டு forward செய்யும் அன்பு சகோதரி ராஜி(ஒரு சினிமா மலர் ஆரம்பிக்க சொல்லி suggest பண்ணிருக்கேன்) , பொறக்கும் போதே காமெராவும் கையுமா தான் பொறந்து இருப்பாங்களோ ன்னு நெனைக்கற மாறி படம் எடுக்கற maddy & truth, அழகாக இருக்கும்/எழுதும் மது, கம்ப்யூட்டர் பத்தி என்ன கத்துக்கிட்டாலும் பகிர்ந்து கொள்ளும் Rethanya, straight பஸ் இருந்தாலும் எறங்கி எறங்கி ஊருக்கு போற கதிர்,(எங்க வீட்டு கதிர் அதுக்கு opposite, straight பஸ் இல்லன்னா அந்த ஊருக்கே போக மாட்டார்), மனைவிய வீட்டுல விட்டுட்டு படம் பாக்க போறதுக்கு பிளான் போடற விஜய், வாலிபர்சங்கம் ன்னு பேர் வெச்சுக்கிட்டு வெறுமனே ஜாலி பண்ணாம, ஆழ் கிணருல விழுந்து இறந்த பையனை பற்றி பதிஞ்ச சரவணன், எல்லாரும் மும்முரமாக நான் கடவுள் விமர்சனம் எழுதும் நேரத்தில்,தான் மட்டும் வித்தியாசமாக விமர்சனம் எழுதின எல்லாரையும் விமர்சிச்ச மணிகண்டன், இப்டி நிறைய பேர்.


"ஒரு கும்பலா தான் கெளம்பி இருக்கீங்க, எப்டியும் போங்க"

No comments:

Post a Comment