Friday 1 January 2010

என் செல்ல செல்வங்கள் - ஒரு முன்னோட்டம்.



தமிழ் இணையம் அப்போது தான் எனக்கு அறிமுகம். இரண்டரை வருடங்கள் இருக்கும்.ஒரு மதிய நேர 'மரத்தடி' வாசிப்பின் போது கண்ணில் பட்டது தான் 'என் செல்ல செல்வங்கள்' தொடர்.

அண்ணனும் தங்கையுமாக சேர்ந்து ரெண்டு வாத்து குஞ்சுகளை அண்டா தண்ணில நீச்சல் அடிக்க விட்டுட்டு அடுத்த வீட்டுக்கு போய்டுவாங்க. திரும்பி வந்து பார்க்கறப்போ, நீந்தி நீந்தி களைப்பான வாத்துகள், தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டு இருக்கும். இதான் முதல் அத்தியாயம். "சோகத்தை கூட சுவையாக சொல்ல முடிந்து இருக்கிறதே" இந்த எண்ணத்துடன் தொடர்ந்தேன். பத்தொன்பது அத்தியாயங்கள். வளர்ப்பு பிராணிகள் பற்றிய நெகிழ வைக்கும் தொடர்.நடுவில் தண்ணீர் குடிக்க கூட எழுந்திரிக்க வில்லை. "கப்புவின் கடைசி நாட்கள்" படித்து முடித்து நிமிர்ந்த போது வெளியில் இருட்டு, உள்ளே கனம். சாப்பிட தோன்ற வில்லை. அப்படியே படுக்கையில் விழுந்தவள் தான். கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தாலும் கூட, ஏதோ ஒரு நிறைவான உணர்வு. எங்கள் வீட்டில் எங்களுடன் வளர்ந்த ஜூலி, ஜானி, பப்பி , ப்ளாக்கி எல்லாரும் கனவில் வந்து போனார்கள்.

ஒரு நாய் பூனை கதைக்கு இவ்ளோ பெரிய பில்டப்பா? என்று கேட்பவர்களுக்கு என் பதில் இது தான்.
-முதலாவதாக செல்ல பிராணிகள் நமது குழந்தைகள் போல தான். அன்பு செலுத்துவதற்கு, அதற்கும் மேலாக அன்பை பெறுவதற்கு, இதை விட ஒரு எளிய வழி இருக்க முடியாது.
-அதை விட முக்கியம். தனிமையில் வாடும் எத்தனையோ பேருக்கு, வளர்ப்பு பிராணிகள் தான் ஆறுதலாக இருக்கிறார்கள்.

அடுத்ததாக, 'என் செல்ல செல்வங்கள்' வளர்ப்பு பிராணிகள் பற்றிய ஒரு தொடர் மட்டும் அல்ல."பிராணி விரும்பிகளுக்கும்,வெட்னரி டாக்டர்களுக்குமானது,not my kind" என்று நினைத்து விட வேண்டாம்.

தொடரை ஊன்றி படித்தவர்கள் இதை கட்டாயம் ஒத்துக்கொள்வார்கள். வாழ்க்கையின் மிக சாதாரணமான நிலையில் இருந்த ஒரு குடும்பம், படிப்படியாக எப்படி ஒரு சமூக அந்தஸ்த்தை அடைகிறது என்று, டைரக்டர் விக்ரமன் ஒரே பாட்டுக்குள் அடைத்து விடும் விஷயம், இந்த செல்லங்கள் தொடரில், subtle ஆக சொல்ல பட்டு இருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாடகை வீடு மாற்றுவதையே ஏதோ அடுத்த ஊருக்கு ஒரு நாள் பயணம் செல்வது போல, சாவகாசமாக செய்ய முடிந்த அளவில் மட்டுமே பொருட்கள் வைத்து இருக்கும் ஒரு எளிய குடும்பம், தொடரின் முடிவில் நியூசிலாந்தில் சொந்த வீட்டில் இருந்து அடுத்த தெருவில் இருக்கும் கால்நடை மருத்துவரிடம், காரில் செல்லும் அளவுக்கு உயர்ந்து இருப்பார்கள்.

துளசி கோபால்.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...ன்னு ஒரு பாட்டு இருக்கு.அது மாதிரி வலையுலகத்தில் டீச்சர் யாருன்னு கேட்டு பாருங்க. இவங்க தான். இவர்களுடைய பயணக் கட்டுரைகளும், புராணக்கதைகளை எளிமையாக சொல்லும் விதமும் மிகவும் பிரபலம்.1000 பதிவுகளை அனாயாசமாக தொட போகிறவர்."தேவதை" இதழில், "பெரிய மனசு, பெரிய மனுஷர்" என்ற தலைப்பில் இவர்களைப் பற்றிய கட்டுரை சமீபத்தில் வெளியாகியது.இவர்களுடைய பதிவுகளில் எளிமை இருக்கும். "Woman next door" இமேஜ் இருக்கும். அழகான புகைப்படங்கள் இருக்கும். நல்ல நகைச்சுவை இருக்கும். செல்ல செல்வங்கள் தொடரிலும் இவை அனைத்தும் உண்டு.

ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இவங்களுக்கு வண்ணத்து பூச்சி விருது கொடுத்தப்போ, இவங்களை பத்தி எழுதின நாலு வரிகள்:
"சூரியனுக்கு டார்ச் அடிக்காம நேரா விஷயத்துக்கு வரேன். இவங்க எழுதாத விஷயமே கிடையாதுங்கற அளவுக்கு வெரைட்டி. இவங்க அன்றாடம் வாழறதை எல்லாம் பதியறாங்களா அல்லது பதியறதுக்காக வாழறாங்களான்னு இனம்பிரிக்க முடியாத அளவுக்கு அவங்க வீட்டு பெர்சனல் விஷயங்கள்லேருந்து, நியூசிலாந்து விசேஷங்கள் வரைக்கும் எதையும் மிஸ்பண்ண முடியாது. எனக்குத் தெரிஞ்சு பேச்சுத் தமிழ்லயே சக்கைபோடு போடமுடியும்னு முதன்முதலா இணையத்துல நிரூபிச்சவங்க. எல்லாருக்கும் நல்லவங்கன்னு பாராட்டா பலரும் மாற்றா சிலரும் சொன்னாலும், அது எவ்வளவு சிரமம்னு அனுபவிச்சா தெரியும்."

விஷயத்துக்கு வரேன். துளசி கோபால் எழுதிய 'என் செல்ல செல்வங்கள்' தொடர் புத்தகமாக வெளிவருகிறது. இன்று முதல் புத்தக கண்காட்சியில் கிடைக்கும். சந்தியா பதிப்பகம்.

தொடரை படித்து இரு வருடங்களுக்கு பிறகு, எதேச்சையாக இவர்களுடைய அறிமுகம் கிடைக்க போக, இவர்களுக்கு ஒரு மெயில் தட்டினேன். "உங்கள் செல்லங்கள் பத்தொன்பதையும் ஒரே நாளில் படித்து, மூன்று நாட்கள் கப்புவை நினைத்து அழுதவள் நான். இப்போதும் அந்த கடைசி எபிசோடை நினைத்தாலே மனசு கனத்து போய் விடும் எனக்கு. செல்லங்களை நான் உங்கள் செல்ல குழந்தைகள் பற்றிய தொடராக மட்டும் பார்க்க வில்லை. வாழ்க்கையின் மிக சாதாரண நிலையில் இருந்து, படிப்படியாக நீங்க உயர்ந்துள்ள நிலையை நீங்கள் எவ்ளோ எளிமையாக, எங்களுக்கு உணர்த்தி இருந்தீர்கள்"என்று நான் அனுப்பி இருந்த மடலை புத்தகத்தின் முன்னுரையில் சுட்டி இருப்பதில் மகிழ்ச்சி. "புதிய பார்வை" இதழில், புத்தகத்தின் சில சுவாரஸ்யமான பக்கங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். தன்னுடைய வலைப்பதிவில் ஸ்கேன் பண்ணி போட்டு இருக்கிறார்.பாருங்கள்.

My verdict: Pets and BEYOND.

10 comments:

  1. தகவலுக்கு நன்றி. புத்தாண்டு நல்லா கொண்டாடுனீங்களா?

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி ப்ரியா.

    ReplyDelete
  3. பகிர்விற்கு நன்றி ப்ரியா.

    அன்று சொல்லும் போது புரியலை. இப்போது புரிந்து விட்டது.

    துளசி டீச்சருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. Happy New Year!!தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. //Woman next door" இமேஜ் இருக்கும்//

    அவங்க நெக்ஸ்ட் டோர் வுமன் தான். :)
    டீச்சருக்கே வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. நம்ம பக்கம் உங்க ஓட்டும், கருத்தும் கானோமே? வரலாமே?

    ReplyDelete
  7. ரொம்ப நுணுக்கமா துளசியை அணுகி இருக்கீங்க ப்ரியா.
    துளசி கோபால் பதிவுக்குப் போய் சிரிக்காமலோ, இல்லை எதையாவது உணராமலோ திரும்ப முடியாது. அவங்களெ ஒரு அற்புதமான மனுஷி. நகைச்சுவை உணர்வும், மனிதாபிமானமும் நிறைந்த மனுஷி.
    மிக்க நன்றி. அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. இவங்க அன்றாடம் வாழறதை எல்லாம் பதியறாங்களா அல்லது பதியறதுக்காக வாழறாங்களான்னு இனம்பிரிக்க முடியாத அளவுக்கு அவங்க வீட்டு பெர்சனல் விஷயங்கள்லேருந்து, நியூசிலாந்து விசேஷங்கள் வரைக்கும் எதையும்

    எனக்குத் தெரிஞ்சு பேச்சுத் தமிழ்லயே சக்கைபோடு போடமுடியும்னு முதன்முதலா இணையத்துல நிரூபிச்சவங்க. எல்லாருக்கும் நல்லவங்கன்னு பாராட்டா, அது எவ்வளவு சிரமம்னு அனுபவிச்சா தெரியும்."

    உண்மையான நபருக்கு கிடைத்த தகுதியான பாராட்டு இது.

    ReplyDelete
  9. மிக நல்ல பகிர்வு ப்ரியா.. வாழ்த்துக்கள் உங்களுக்கும் துளசி கோபாலுக்கும்..

    ReplyDelete